மௌனிக்கப்பட்ட காலிமுகத்திடல்

Admin
Aug 27,2022

இலங்கையில் போராட்டங்களுக்கு பின்னரும் சீர்திருத்தங்களை எதிர்பார்க்கமுடியவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் உருவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்தி இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் கோட்டாபயவை ஓடவைத்த காலிமுகத்திடல் போராட்டக்களம், படையினரால் தகர்க்கப்பட்டமையை அடுத்து இன்று ஆள் நடமாட்டம் அற்ற இடமாக மாறியுள்ளதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் கோட்டாபயவுக்கு பின்னர் பதவிக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சர்களின் கூட்டாளியாகவே பார்க்கப்படுகிறார் என்று மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக இந்த இதழ் குறிப்பிடுகிறது.

தற்போதைய ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இந்த மௌனம் புயலுக்கு முன் ஒரு அமைதி மாத்திரமே என்று பொதுமகன் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஊழல் அமைப்பைப் பாதுகாக்கும் அனைவரையும் பதவி நீக்கம் செய்வதே இலக்கு என்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் இருமுறை கைது செய்யப்பட்ட திசர அனுருத்த பண்டார தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஒரு சில எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் சட்டமன்றத்தில் குடிமக்கள் பங்கேற்பதற்கான இடத்தை உருவாக்குவதற்காக இந்த ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பிளாக் கேப் இயக்கம் விரும்புவதாக வெளிநாட்டு செய்தி இதழ் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை எதிர்ப்பாளர்கள் மீதான இராணுவ அணுகுமுறையை கருத்தில் கொண்டு விக்கிரமசிங்க எந்த சீர்திருத்தங்களையும் கொண்டுவரும் எண்ணம் கொண்டவர் என்பதை எதிர்பார்க்கமுடியவில்லை திசர அனுருத்த பண்டார தெரிவித்துள்ளார்